டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திப்படி, மேற்கு ஒடிசாவில் வெப்பத்தாக்குதல் காரணமாக மேலும் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பீகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் 1 பேரும் உயிரிழந்தனர்.
ஹரியானா, சண்டிகர்-டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை நிலவியது. மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்டின் சில தொலைதூரப் பகுதிகளிலும் இது ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலையத்தின் (AWS) சென்சார் பதிவுசெய்த வெப்பநிலை, "வழக்கமான கருவிகள் பதிவுசெய்த அதிகபட்ச வெப்பநிலையை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது" என இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) நிபுணர்கள் கண்டறிந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
முங்கேஷ்பூர் சம்பவம் குறித்த வரைவு அறிக்கையைப் புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்துகொண்டார். அதில், AWS கருவியால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை, வழக்கமான கருவிகளை விட மூன்று டிகிரி அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புனேவின் தரை அளவீட்டுத் துறை, அனைத்து AWS வெப்பநிலை உணரிகளையும் தவறாமல் சோதித்து, அளவுத்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
AWS-ஐ நிறுவுவதற்கு முன்பு பல்வேறு வெப்பநிலைகளில் தொழிற்சாலை ஏற்புச் சோதனைகளை மேற்கொள்ளவும் இது பரிந்துரைக்கிறது, மேலும் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள அத்தகைய உபகரணங்களுக்கு வழக்கமான பராமரிப்பு தேவை என்றும் இது வலியுறுத்துகிறது.
மற்ற AWS நிலையங்களில் அளவிடப்பட்ட வெப்பநிலை மற்றும் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட கைமுறை கண்காணிப்புகளுடன் ஒப்பிடுகையில், முங்கேஷ்பூரில் பதிவான AWS அளவீடுகள் துல்லியமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
மேலும், பாலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை, 1998-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி பதிவான 48.4 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய அதிகபட்ச வெப்பநிலை சாதனையைத் தாண்டியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாக்பூரில் உள்ள பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடத்தில் நிறுவப்பட்டுள்ள ஏடபிள்யூஎஸ்-இல் (AWS) சென்சார் கோளாறு காரணமாக வெப்பநிலை அளவுகள் உயர்ந்ததாக வெள்ளிக்கிழமை அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்தது.
டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் அதிகபட்ச வெப்பநிலை, ஐந்து தரை கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
மே 29 அன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை 45.2 முதல் 49.1 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது, ஆனால் முங்கேஷ்பூரில் நிறுவப்பட்ட AWS அமைப்பு அதிகபட்ச வெப்பநிலையாக 52.9 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, வானிலை ஆய்வுகளுக்காக நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட AWS-கள் நிறுவப்பட்டுள்ளன.
பதிவிட்ட நேரம்: அக்டோபர் 22, 2024
